சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் என எதிர்பார்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
‘தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாட்டைக் காப்போம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அதிமுகவின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி குறித்து சில தரப்பினர் விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற தவறான பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும் என்றார்.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோர் ஒருமித்த கருத்துடன் செயல்படுவார்கள் என்றும் பாஜகவுடன் அதிமுகவுக்கு ரகசிய உடன்பாடு ஏதும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தமிழ்நாட்டில் எத்தனை முனைப்போட்டி என்பது உறுதியாகத் தெரியவரும் என்று குறிப்பிட்ட பழனிசாமி, தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரி என்று யாரும் இல்லை என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் பிரசாரம் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அனைத்து அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வெற்றிக்காக கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார்.