சென்னை: அடுத்த மாதம் சென்னை வரும் பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் சிலரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 4ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி. அச்சமயம் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
பொதுக்கூட்டம் எங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமரின் பாதுகாப்புக் குழு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஓரிரு நாள்களில் எந்த இடம் என்பது முடிவு செய்யப்படும் எனவும் தெரிகிறது.
பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் கட்சித் தலைவர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடங்குவார் என்றும் தமிழகம் சார்ந்த சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே நாடு தழுவிய அளவில் பல்வேறு மாநிலங்களில் களமிறங்கும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் தமிழகத்தின் முக்கியமான தொகுதிகளில் களமிறங்கப்படும் பாஜக வேட்பாளர்கள் சிலரும் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
முன்னதாக, பிப்ரவரி 27ஆம் தேதியன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சி திருப்பூரில் நிறைவு பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பின்னர் அண்ணாமலையுடன் தனியாக கலந்தாலோசிக்கும் அவர், தமிழக பாஜக சார்பில் தேர்தலில் களமிறங்க விருப்பம் தெரிவித்தவர்கள் குறித்து தகவல்களை கேட்டறிவார் என்றும் வேட்பாளர் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளுக்கு, மதுரையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் அடுத்தடுத்து இரண்டு முறை தமிழகம் வருவது பாஜகவினரை உற்சாகப்படுத்தி உள்ளது.