சென்னை: சாதி மாறி திருமணம் செய்து கொண்ட தங்கையை பழிவாங்கத் துடித்த அவரது சகோதரர் தங்கையின் கணவரை ஆணவக்கொலை செய்ததாக கைதாகியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 26 வயதான பிரவீன் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கும் மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையறிந்த ஷர்மியின் குடும்பத்தார் அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமலேயே சில மாதங்களுக்கு முன்பு பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் தங்கை ஷர்மி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் தினேஷ். இந்நிலையில் பிரவீன் சனிக்கிழமை இரவு மது அருந்திய பின்னர், பள்ளிக்கரணைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தினேஷ் உள்ளிட்ட நான்கு பேர் திடீரென சரமாரியாகத் தாக்கத்தொடங்கினர்.
இதைக்கண்டு அவ்வழியே சென்று கொண்டிருந்த பலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தை சென்றடையும் முன்பே பிரவீன் உயிர் இழந்து விட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஆணவக்கொலை செய்த தினேஷ், அவரது நண்பர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.