ஈரோடு: இருபது நிமிடங்களில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1,000 பரிசு அளிக்கப் படும் என்று அறிவித்த புதிய உணவகத்தைப் பொதுமக்கள் சாப்பிட்டே காலி செய்தனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு திறக்கப்பட்ட அசைவ உணவகத்தைப் பிரபலப்படுத்த வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், உணவு சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல் அறிந்து திரண்ட உணவுப் பிரியர்கள், போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தனர்.
விதிமுறைப்படி பரிமாறும் உணவுகள் அனைத்தையும் 20 நிமிடங்களில் சாப்பிட வேண்டும் என்பது நிபந்தனை.
அதன்படி போட்டியில் பங்கேற்றவர்கள், கோழி பிரியாணி, இறைச்சி, நாட்டுக்கோழி, பள்ளிப்பாளையம் வறுவல், சில்லி சிக்கன், வாத்துக்கறி, எலும்புக்குழம்பு சாப்பாடு, ஆட்டுக்கால் சூப், முட்டை, மீன் ரோஸ்ட், மீன் குழம்பு, ரசம், தயிர் பீடா உள்ளிட்டவற்றை சாப்பிட்டனர்.
உணவகத்தின் தொடக்க விழாவை ஒட்டி நடத்தப்பட்ட இந்தப் போட்டியைக் காண ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இதனால் உணவக உரிமையாளர் பாபு மகிழ்ச்சி அடைந்தார்.