நெல்லை: தண்டவாளத்தில் லாரி ஒன்று கவிழ்ந்து கிடப்பதை அறியாமல் வேகமாக வந்த ரயிலை ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தைக் கொண்டு உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய வயதான தம் பதியர்க்குப் பாராட்டுகள் குவிகின்றன.
சனிக்கிழமை இரவு நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, ஐம்பது அடி ஆழமுள்ள பள்ளத்தில் அது கவிழ்ந்தது.
விபத்து நிகழ்ந்தபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களான 66 வயது சண்முகையாவும் அவரது மனைவி வடக்கத்தி அம்மாளும் (60 வயது) அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அவ்வழியே ரயில் ஒன்று வேகமாக வருவதைக் கண்டு இருவரும் பதறிப் போயினர். இருவரும் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டதுடன், தண்டவாளத்தின் மீது ஓடியபடியே ரயில் ஓட்டுநரின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.
இதன் பலனாக லாரியை நெருங்கும் முன்பே அந்த ரயில் நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


