திருவாரூர்: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியமான பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விளங்கி வருகிறது திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அங்கு பயிலும் மாணவர்களும், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் பேரச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதில் புதன்கிழமை (பிப்ரவரி 28) அதிகாலையில் காய்ச்சல் நோயாளிகளுக்கான சிறப்புப் பிரிவு பகுதியில், நோயாளிகளுக்கான படுக்கைகளில் தெருநாய்கள் படுத்திருந்தன.
இதனால் நோயாளிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை விரைந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த நாய்கள் தெருக்களில் நடந்துசெல்வோரையும் இரு சக்கர வாகனமோட்டிகளையும் துரத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

