சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
கட்சிகள் அதன் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் , அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜகவில் மாநில அளவில் குழு அமைத்துள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அனுமதியுடன் கட்சிகளுடன் ஆலோசிக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மோகன், தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

