வானதி சீனிவாசன்: பிரதமரின் வருகையால் ஸ்டாலினுக்குத்தான் தோல்வி பயம்

2 mins read
3eef2e49-8383-4b81-9e45-f01bd18324c5
வானதி சீனிவாசன். - படம்: ஊடகம்

கோயம்புத்தூர்: “பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற திருநெல்வேலி, பல்லடம் பாஜக பொதுக் கூட்டங்களுக்கு திரண்ட மக்கள் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்று கூறியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கையில், “மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தால்தான், பிறந்தநாளை ஒட்டி தொண்டர் களுக்கு எழுதிய கடிதத்தில் புலம்பித் தீர்த்திருக்கிறார்.

“பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியதில் இருந்து அவர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது,” எனக் கூறியிருக்கிறார்.

“பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக தடைபோட்டு வருவதைச் சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘எந்த திட்டத்திற்கு தமிழக அரசு தடையாக இருந்தது’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதில் திமுக செய்துவரும் சுணக்கத்தால், கோவை விமான நிலையத்திற்கான பணி தடைபட்டுள்ளது. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையேயான அதிவிரைவுச் சாலைத் திட்டத்திலும் தமிழகப் பகுதியில் ஏற்பட்டு வரும் சுணக்கத்திற்கும் தமிழக அரசே காரணம்.

“ஏழை மாணவர்களின் நலனுக்கான ‘நவோதயா பள்ளிகள் திட்டத்தை’ திமுக ஏற்க மறுக்கிறது. மேலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய திமுக அரசு மறுத்துள்ளதால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு, தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

“ஊழல், குடும்ப ஆட்சிக்குத் தடையாக மத்திய அரசு இருப்பதால், மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையைத் திமுக கடைப்பிடித்து வருகிறது. அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அரசு நிர்வாகம் என்று வரும்போது மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணக்கமாகச் செல்ல வேண்டும். அப்போதுதான், மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

“மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் திரும்பத் திரும்ப மத்திய அரசு மீது திமுக குறை சொல்கிறது. மூன்றாவது முறையாக பாஜக அரசு அமைந்ததும், மதுரையில் பிரம்மாண்டமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும்,” என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையே வார்த்தைப்போர் வலுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்