சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ரயிலில் கடத்திய பிரகாஷ் என்பவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொதிகை விரைவு ரயிலில் கடந்த 1ஆம் தேதியன்று கடத்தப்பட்ட 30 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்தி வந்த பிரகாஷை கைது செய்தனர்.
இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்தும் போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பிரகாஷின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடத்தி அவரையும் திங்கட்கிழமை காவலர்கள் கைது செய்தனர்.
இந்தச்சம்பவம் தொடர்பில், பிரகாஷின் நெருங்கிய நண்பர்கள், அவர்களது தொலைபேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றையும் காவலர்கள் சேகரித்து வருகின்றனர்.