புதுடெல்லி: நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தைத் தரக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின்படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் மனுதாரர் கூறும்விதத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் கூறிய நீதிபதிகள் அவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கித் தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நாம் தமிழர் கட்சி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் பெரிய அளவில் சீமான் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் வாக்குகளின் விழுக்காடு தற்போது 7 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது.
விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததால் அதிர்ச்சி அடைந்த சீமான், இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்போது உயர் நீதிமன்றம் சின்னம் இல்லை என கைவிரித்து விட்டதால், உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார் சீமான்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கும்படி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறேன். சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், இறுதியாக எந்தச் சின்னம் கிடைக்குமோ அதை வைத்து போட்டியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.