திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் பருவத் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், எல்லாத் துறைகளிலும் குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் மட்டும் அனைத்து மாணவர்களும் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தேர்வு முடிவுகள் வந்துள்ளன.
அதேபோல், மற்றப் பாடங்களில் அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். சில மாணவர்கள் தேர்வெழுதிய நிலையிலும், அவர்கள் தேர்விற்கு வரவில்லை என பதிவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்கலைக்கழகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குளறுபடிக்குக் கணினிப் பிரச்சினை காரணமா, தவறு நிகழ்ந்ததற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிவதுடன், இத்தகைய தவறுகளைச் சரிசெய்ய பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.