சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இலக்கியவாதி பாஸ்டினா சூசைராஜுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து, செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளது.
அதில், பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகச் செயலாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அனைத்துலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்படும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வருகிறார் முன்னணி எழுத்தாளரான பாஸ்டினா சூசைராஜ்.
பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது அனு பவங்களின் மூலம் தமிழிலக்கிய படைப்புகளாகவும் சமூகத்தில் நிலவும் அநீதிகளை எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார்.
கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும் கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் இவரது நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.
இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ஆம் ஆண்டில் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதைப் பெற்றுள்ளது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.