சென்னை: பிரபல ஃபோர்டு நிறுவனம் மென்பொருள் தயாரிப்புப் பணியைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ‘ஃபோர்டு பிஸினஸ் சொல்யூசன்ஸ்’ நிறுவனத்தில் மின்சார வாகனங்களுக்கான மென்பொருள் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரிவடைந்து வரும் அனைத்துலகச் சந்தைக்கு ஏற்ப மென்பொருள் தயாரிப்புப் பணியை விரிவாக்கம் செய்ய ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான மென்பொருள் உற்பத்திக்கென தேவைப்படக் கூடிய மென்பொருள்களை சென்னையில் உள்ள நிறுவனம் தயாரிக்கும் என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மென்பொருள்களை மேம்படுத்தும் பணியும் சென்னையில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஃபோர்டு நிறுவனத்தில் தற்போது 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது மேலும் 3,000 பேர் வேலை வாய்ப்புகளைப் பெறுவர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘காக்பிட்’களுக்கான தொழில்நுட்பப் பணியையும் சென்னையில் உள்ள நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் இசைக் காணொளிகளுக்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் பணியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.