சென்னை: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி மத்திய பாஜக அரசுக்கு துணைபோவதாகக் கூறி, பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டேட் வங்கி பட்டியலை தேர்தல் ஆணையத்தில் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.
“ஆனால் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் வழங்க அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்த வங்கி மனுத்தாக்கல் செய்துள்ளது. நாட்டு மக்களுக்கு மத்திய பாஜக அரசின் மோசடிகள் தெரிந்துவிடும் என்பதை மறைப்பதற்காகத்தான் அவ்வாறு செய்துள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல், சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக பெற்றுள்ள தொகைகள் அனைத்தும் லஞ்சப்பணம் என்றார்.
அதேவேளையில் காங்கிரசுக்கு இவ்வாறு கிடைத்த தொகைகள் அனைத்தும் வெறும் அரசியல் நன்கொடைதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ள நிதியில் 90 விழுக்காடு பாஜகவுக்குதான் சென்றுள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு அதிக நிதி கொடுத்துள்ளனர்,” என்று கார்த்தி சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.