சென்னை: திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் நேரலையில் பேசினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இம்முறை மூன்று மக்களவைத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கக் கோரியது. ஆனால் திமுக தலைமை இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது.
இதனால் விசிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தாம் அறிந்திருப்பதாகவும் கட்சி நலனை விட நாட்டு நலன் கருதி செயல்படுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
“திமுகவையோ, கூட்டணிக் கட்சிகளையோ விமர்சிப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. கட்சி நலனை தள்ளி வைத்துவிட்டு நாம் செயல்பட வேண்டியுள்ளது,” என்று திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.
கூட்டணியில் எந்தக் கட்சி பலமாக இருக்கிறது என்ற ஒப்பீட்டில் விசிகவுக்கு உடன்பாடில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சிலர் அக்கறை உள்ளவர்கள் போல கருத்துகளை சொல்லி உணர்ச்சியை தூண்டுவார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இரையாகக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தொகுதி உடன்பாடு ஏற்பட்ட உடனேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.