திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.
இதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை இரவு அதிகாரபூர்வமாக வெளியானது.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது பாஜக, அமமுக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பது உறுதி. தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு அமமுக அணில் போல உதவி செய்யும்,” என்றார் தினகரன்.
கூட்டணியில் இணைவதற்கான தங்களுடைய கோரிக்கைகள் குறித்து பாஜகவுக்கு தெரியும் என்றும் எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.
தாமரை சின்னத்தில் அமமுக போட்டியிட வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகவின் வெற்றி அவசியம் என்றார்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் நெருங்கி வந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அது நிறைவேறியுள்ளது,” என்றார் தினகரன்.