கூடலூர்: முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வன விலங்குகள் தவித்து வருகின்றன. இதையடுத்து, வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி யானைகளின் தாகத்தை தீர்த்து வருகின்றனர் வனத்துறையினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். இங்கு, புலிகள், யானைகள், கரடிகள், சிறுத்தைகள் மான்கள் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது அங்கு கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரும் உணவும் போதிய அளவில் கிடைக்காமல் யானைகள் பரிதவித்து வருகின்றன.
இதையடுத்து, டிராக்டர்கள், லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர்.
அந்த தண்ணீர்த் தொட்டிகளை நோக்கி ஆவல் பொங்க குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் தண்ணீர் அருந்தி தாகம் தணித்துச் செல்கின்றன.