சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைப்பதாக அதன் தலைவரும் திரைப்பட நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த இணைப்பு விழா சென்னையில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
“ஒவ்வொரு தேர்தலின்போதும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனும் கேள்வியை கட்சியினர் எழுப்பி வந்தனர். இது என் மனதை வெகுவாகப் பாதித்தது.
“இந்நிலையில் நம்முடையை ஆதரவை பிரதமர் மோடிக்கு அளித்து மேலும் வலிமையோடு செயல்பட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
“காலஞ்சென்ற முதல்வர் காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளையர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைக்கிறேன்,” என்று இணைப்பு விழாவில் பேசியபோது சரத்குமார் குறிப்பிட்டார்.