மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி தரப்படுவதாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், அரசாணையில் குறிப்பிடப்படாத இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.