புதுடெல்லி: குழந்தைகள் நடித்த ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளையர் ஒருவர் குழந்தைகள் நடித்த ஆபாசப் படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகளின் ஆபாசக் காணொளியைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும் மற்றவர்களுக்கு இதனை அனுப்பி பகிர்ந்துகொண்டால் அது குற்றம் என்றும் தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்ற கொடூரமான கருத்தைக் கூற முடியும்,” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்தை மூன்று வாரத்துக்குள் திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.