மதுரை: எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்றும் அதன் பிறகு எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுமானப் பணியின் உண்மை நிலையை மறைத்து பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்றும் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி ஒதுக்கீடுப் பணி நிறைவடைந்துவிட்டது என்றும் 2026இல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.