நாகை: தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்களில் 22 பேர் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கைதான மீனவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.