புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
அதேநேரம் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இதுவரை வந்துள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், மீண்டும் பிரதமராக மோடியே தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமுக கூட்டணிதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
நியூஸ்18 நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
21 மாநிலங்களில் உள்ள 518 தொகுதிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக நியூஸ் 18 நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 5 தொகுதிகளும் அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 14 தொகுதிகளும் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு மூலமாகத் தெரிகிறது.
கேரளாவில் முதல்முறையாக பாஜக 2 தொகுதிகளை கைப்பற்றும் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அந்தக் கட்சிக்கு 18 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலும் மற்றொரு மத்திய அமைச்சர் முரளீதரன் ஆட்டிங்கல் தொகுதியிலும் நடிகர் சுரேஷ்கோபி திருச்சூரிலும் போட்டியிடுகிறார்கள்.
பத்தனம் திட்டா தொகுதியில் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.