சிவகங்கை: மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அகழாய்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்த தமிழக அரசு போதுமான நிதியைப் பெற்றுள்ளது என்றும் கடந்த ஆண்டு இறுதியில் அகழாய்வு மேற்கொள்ள அத்துறை தயார் நிலையில் இருந்தது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் மேற்குறிப்பிட்ட 8 இடங்களிலும் அகழாய்வு பணிகளைத் தொடங்க முடியவில்லை.
அடுத்த ஒரு வாரத்துக்குள் அனுமதி கிடைக்காமல் போனால், நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டு, வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதான் மீண்டும் பெற வேண்டும் என்கிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள்.
இவ்வாறு செய்யும்போது, மே மாதம்தான் பணியைத் தொடங்க முடியும். அடுத்த நான்கு மாதங்களில் மழைக்காலம் தொடங்கிவிடும் என்றும் இதனால் அகழாய்வுப் பணிகளை முழுமையாக முடிக்க இயலாமல் போய்விடும் வாய்ப்புள்ளதாக தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உரிய அனுமதியை வழங்கி இருந்தது.
“மேலும், இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு, அகழாய்வை தீவிரப்படுத்த தொல்லியல் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் பணிகள் துவங்கவில்லை,” என அதிகாரிகள் கூறியதாக தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.