சென்னை: காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நான்கு நகராட்சிப் பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சிப் பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருந்த நிலையில், இப்போது மேலும் நான்கு மாநகராட்சிகளை உருவாக்கியதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சியுடன் 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சியுடன் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சியுடன் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் நகர்ப்புற மக்கள்தொகை 48.45% ஆக இருந்தது. தற்போது நகர்ப்புறங்களில் மக்கள்தொகை 53%க்கும் மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகளில், அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகள், பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக செய்து தரப்படும். இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மேம்படவும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.