சென்னை: முன்னாள் அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கிறார் என தமிழக சபாநாயகர் அறிவித்துள்ளதை அடுத்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கவும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் ஆளுநர் ரவி மறுத்துவிட்டார்.
இதனால் தமிழக அரசியல் களத்தில் அனல் வீசுகிறது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது திமுக.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவியை இழந்தார் பொன்முடி. பின்னர் அவர் தமது அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது. இதையடுத்து தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார் பொன்முடி.
அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவில் அதுபோன்று குறிப்பிட இயலாது என சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ ஆனார் பொன்முடி. எனவே அவரை மீண்டும் அமைச்சராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆளுநர் மாளிகை இதற்கு மறுத்துவிட்டது.
“பொன்முடி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது. பொன்முடி குற்றவாளி அல்ல என அறிவிக்கவில்லை. எனவே அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது,” என ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அரசு, திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி நிலவும் நிலையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது தமிழக அரசு.
முன்னதாக இது தொடர்பாக தீவிர ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் வழக்கு குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும் என்றும் அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சட்ட நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக செவ்வாய்க்கிழமையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.