சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துடன் ஒட்டியுள்ள ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் தமிழகக் காவல்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூரை அடுத்த காரைக்காடு சோதனைச் சாவடி அருகே தீவிர வாகனச் சோதனை நடைபெற்றது.
எல்லைப் பகுதிகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகளை அமைத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர, கர்நாடக எல்லைப் பகுதிகளில் ஏற்கெனவே ஒன்பது சோதனைச் சாவடிகள் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில எல்லையான கர்னூர், பூனப்பள்ளி, தளி உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலையொட்டி, துப்பாக்கி வைத்திருப்போர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 2,700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளில் 700 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

