சென்னை: பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) கையெழுத்தானது.
அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை மாலை பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துள்ளது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ராமதாஸ் இல்லத்தில் நடத்திய ஆலோசனை முடிவில் பாஜக - பாமக இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதன் மூலம் பாஜக தலைமையில் 3வது அணி ஒன்று புதியதாக உதயமாகி உள்ளதாக அரசியல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “அறுபது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
“கடந்த பத்தாண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது,” என்று கூறினார்.
“பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது,” என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களின் அன்பைப் பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவு,” என்றார் அவர்.
முன்னதாக, தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே ஏழு தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தனர். அதையடுத்து இரு தரப்பினரிடையே கூட்டணி ஒப்பந்தம் முடிவானதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அதே வேகத்தில், சேலத்தில் நடைபெற்ற மோடி கூட்டத்திற்கு ராமதாசும் அன்புமணியும் புறப்பட்டுச் சென்றனர். அந்தப் பொதுக்கூட்டத்தில் அவர்களுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களும் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் அமர்ந்திருந்தனர்.
கடந்த 2019 தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில்தான் பாமக இடம்பெற்றிருந்தது. இரு கட்சிகளின் கூட்டணி பலத்துடன் நின்றும் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் தோல்வியைத் தழுவினார். அன்புமணிக்கே இந்த நிலை என்றால், மற்ற பாமக வேட்பாளர்கள் நிலையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
தொடர்ச்சியான தோல்விகளால் மாம்பழ/g சின்னத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது. பாஜகவில் பாமக விரும்பிய தொகுதியை எடுத்துக்கொள்ள முடியும். அதிமுகவில் அது நடப்பது கஷ்டம்.
பத்து தொகுதிகளில் போட்டியிடுவதால் குறைந்தது ஒரு விழுக்காடு வாக்கு வாங்கினால் சின்னத்தை தக்கவைக்க முடியும் என்ற கணக்குப்படி பாஜக கூட்டணி பக்கம் பாமக சாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேர்தல் வெற்றியை தாண்டி தமிழகத்தில் அதிக வாக்கு விகிதத்தைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அதற்கு பாமக கூட்டணி உதவும் என்பது பாஜகவின் கணக்கு.
தற்போது அதிமுக கைவசம் இருப்பது தேமுதிக மட்டுமே. இன்னும் அது உறுதியாகாமல் நீட்டித்து வருகிறது. வாக்கு விகிதம், வெற்றி என்பதை தாண்டி பலமான கூட்டணி என்ற நோக்கிலேயே அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துள்ளது பாஜக - பாமக கூட்டணி.
அதேநேரத்தில் அதிமுகவும், பாஜகவும் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கே லாபம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் பாமக சேர்ந்திருந்தால் வடமாவட்டங்களில் திமுகவுக்கு சவாலான போட்டி உண்டாகி இருக்கும். தற்போது உண்டாகியுள்ள மும்முனைlg போட்டியில் அதிமுக தனித்தே களம் காண்பதால், வடமாவட்டங்களில் வாக்கு பிரிவுக்கு வழிவகுக்கும்.
கூட்டணி சகிதமாக பத்து வருடங்களாக பலமாக உள்ளது திமுக கூட்டணி. தொகுதி பங்கீடு முதற்கொண்டு அந்தக் கூட்டணியில் பெரிய சலசலப்புகள் இல்லை.
இதனால் தங்கள் கூட்டணிக்கு உரிய வாக்குகள் கிடைத்தாலே வெற்றி எளிதாகிவிடும் என்பதால் பாமக உடன் பாஜக கூட்டணி அமைத்ததில் திமுக கூட்டணி மகிழ்ச்சி அடைந்துள்ளது.