சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வேட்புமனுத் தாக்கலுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.
இணையம் வழி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவும் அனுமதி உண்டு. எனினும் அவ்வாறு தாக்கல் செய்த பின்னர் அசல் (உண்மை) வேட்புமனுவை நேரில் அளிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
“அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் தாம் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராகவும் இருந்தால், ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும்.
“வேறு ஒரு தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்தத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்று பெற்று வரவேண்டும்.
வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளருடன் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மனுத்தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் இம்முறை தேர்தல் செலவினங்களுக்காக ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். கடந்த தேர்தலில் இத்தொகை ரூ.70 லட்சமாக இருந்தது.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வேட்புமனுவோடு உரிய வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டும். தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களுக்கான காவல்துறை பாதுகாப்புக்கு இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
“தேர்தல் முடிந்த 30 நாள்களுக்குள் வேட்பாளர்கள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்,” என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.