காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த சோதனையின்போது இரண்டு பிரபல நகைக்கடைகளுக்குச் சொந்தமான 18 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி பொருள்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
திங்கட்கிழமை நள்ளிரவில் காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நகைகளுடன் வந்த இரு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
அவற்றை சோதனையிட்டபோது தங்க நகைகளும் வெள்ளி பொருள்களும் கிலோ கணக்கில் இருப்பது தெரிய வந்தது. வாகனங்களில் வந்தவர்கள் உரிய ஆவணங்களைக் காண்பிக்க தவறியதால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அக்குழுவினர் மாநிலம் முழுவதும் பரவலாக சோதனைச் சாவடிகளை நிறுவி பண நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.