சென்னை: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தமிழகத்தின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்நிலைகளில் 50% அளவுக்கு தண்ணீர் குறைந்துள்ளது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த தண்ணீர் சேமிப்புத் திறன் 224 டிஎம்சி ஆகும். தற்போது 76 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 33.9 விழுக்காடு மட்டுமே என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 135 டிஎம்சி தண்ணீர் கையிருப்பில் இருந்தது.
மேலும், தமிழகத்தில் மொத்தம் 90 தடுப்பணைகள் உள்ளன. அவற்றுள் ஆறு தடுப்பணைகள் வறண்டு போய்விட்டன. 25 நீர்நிலைகளில் 20% மட்டுமே தண்ணீர் உள்ளது என்றும் 39 அணைகளில் 20 முதல் 50% தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதனால் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு போல் தமிழக மக்களும் தவிக்க நேரிடுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.