திருச்சி: திருச்சியில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
லால்குடி அருகே நத்தமாங்குடியிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை (மார்ச் 21) காலை சென்று கொண்டிருந்தது.
மேட்டுப்பட்டி அருகே பேருந்து சென்றபோது எதிரே மற்றொரு அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்துக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலையின் ஓரமாக பேருந்தை ஒதுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அரசுப் பேருந்து கவிழ்ந்து வயல்வெளியில் விழுந்தது.
இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தைக் கண்ட அப்பகுதியிலிருந்த கிராம பொதுமக்கள் காயம் அடைந்த பயணிகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு பயணிகள் படுகாயமடைந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லால்குடி காவல்துறை ஆய்வாளர் சரவணகுமார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த அப்பகுதி மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

