சென்னை: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதில் திண்டுக்கல்லில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் கே.பாலு, ஆரணியில் அ.கணேஷ் குமார், கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா.தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் ந. அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோரின் பெயர்கள் பாமக வேட்பாளர்களாக வெளியிடப்பட்டுள்ளன.
வரும் தேர்தலில் அன்புமணி போட்டியிடவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரித் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் 70 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி தோல்வியடைந்தார்.
இம்முறை மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தற்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக செந்தில்குமாருக்கும் திமுக வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் ‘அழகி’, ‘பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர்.