சென்னை: மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்குப் பதில் மாற்றுத் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 அளிக்கப்படும் என்றும் அதிமுக உறுதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அடுத்தடுத்து வெளியாகின்றன.
இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
இனி தமிழகத்துக்கான ஆளுநரை நியமிக்கும் முன்னர் மாநில முதல்வரின் ஆலோசனை, ஒப்புதலைப் பெற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக சேர்க்கப்படும் என்றும் அதிமுக வலியுறுத்தி உள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக வேறு தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் மாநில ஆளுநர் நியமனம் தொடர்பாகவும் மத்திய பாஜக அரசுக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் 12ஆம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அதிமுக கூறியுள்ளது.
மேலும், திமுக அரசு செயல் படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பின்பற்றி, இனி இல்லத்தரசிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர் களின் நலன் காத்திட நலவாரியம், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று, ஆபத்தான சூழலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை ஆகியவை குறித்தும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்.