சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதுசெய்துள்ளது. இதற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
“பத்தாண்டு கால பாசிச பாஜக அரசின் தோல்வி மற்றும் வரும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்ற அச்சத்தால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பாஜக அரசு கைது செய்துள்ளது மத்திய அரசு. இதற்கு முன்னர் இதே பாணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனைக் கைது செய்திருந்தது.
ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு பாஜக பிரமுகர்களும் கைது செய்யப்படுவதில்லை. குறைந்தபட்சம் பேருக்காவது அவர்களிடம் விசாரணைகூட மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ந்து குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.
இதுதான் பாஜகவின் அசல் முகம். இதனால் மக்களின் கோபத்தை பெற்றுள்ளது. அதோடு இது எதிர்வரும் தேர்தலில் இண்டியா கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

