சென்னை: ஒரு சக்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும்போது அதற்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் சமய அடிப்படையில், கடப்பாறையை வைத்து குத்தி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக இந்து தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கு எதிராக நிற்க வேண்டும் எனும் நிலைப்பாடே என்னை திமுக பக்கம் அணி சேர வைத்தது. திமுக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதனால்தான் தொகுதி கேட்டு நிர்ப்பந்திக்கவில்லை.
“என்னைப் பொறுத்த வரை மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளர்களைப்போல் செயல்படுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
“ஒரு சிலர் திராவிடத்தை அழிப்போம் என்கிறார்கள். ஆனால் தேசிய கீதம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்,” என்று கமல்ஹாசன் மேலும் கூறினார்.