சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக தேர்தல் பரப்புரைப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்புடன் இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் எவ்விதப் பிரச்சினையும் இன்றி தேர்தலை நடத்த முடியும். நாட்டின் சராசரியைக் காட்டிலும் தமிழ் நாட்டில் வாக்களிக்கும் விழுக்காடு அதிகமாக உள்ளது. எனவே, ஊரகப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்கள் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வாக்குப்பதிவு நாளில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்கச் செல்லும்போது கைப்பேசி எடுத்துச் செல்வதற்கு அனுமதியில்லை. பதற்றமான சூழல் நிலவும் வாக்குச்சவாடி மையங்களில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படுகிறது. தேர்தல் அமைதியான சூழலில் நடைபெறுவதற்கு அரசியல் கட்சியினரும் தேர்தல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.