நெல்லை: தமிழர்களை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியப் பிரதமராக வரவேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் மாநில அரசு தனக்குரிய நிதியைப் பெறுவதற்கும்கூட நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது எனக் குறிப்பிட்டார்.
வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் அதை பிச்சை (யாசகம்) என்று மத்திய நிதி அமைச்சர் ஆணவத்துடன் ஏளனம் செய்கிறார் என்று குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்றார்.
எனவே தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடிய ஒருவர் இந்தியப் பிரதமராக வர வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில் திமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடினார்.
பிரதமர் வடிக்கும் முதலைக்கண்ணீரை அவரது கண்களே நம்பாது என்றார் அவர்.
“மோடி போன்று தமிழக மக்களை வஞ்சித்த பிரதமர் இந்திய வரலாற்றில் கிடையாது. மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காமல் ஏளனம் செய்கிறது.
“அரசாங்கம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். மக்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. மக்களாட்சியில் மக்களை அவமதித்த பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது.
“தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்றும் பாஜக அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம், வெறுப்பு, வன்மம் என்பது தெரியவில்லை.
மக்களிடம் வெறுப்பை விதைத்து அதில் குளிர்காய நினைக்கும் பாஜக வின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.