தேனி: தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிகளை விலைகொடுத்து வாங்கியுள்ளது தமிழக அரசு.
இந்தியாவில் வர்த்தகம் இல்லாத பயன்பாட்டிற்காக மாநில அரசு இவ்வாறு இடம் வாங்கியிருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 30.41 ஏக்கர் வனப்பகுதி அமைந்துள்ளது. மேகமலை புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள ஐந்தாவது ஆகப் பெரிய புலிகள் காப்பகமாகும்.
மேலும், இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும் விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பகுதியில் ஏலக்காய், காபி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த தனியார் வனப்பகுதிக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் அப்பகுதியைக் கடந்து செல்ல அங்குள்ள மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து அக்குறிப்பிட்ட நிலப்பகுதியை வாங்க அரசுத்தரப்பு முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக ஏழு பேருக்குச் சொந்தமான 30.41 ஏக்கர் பகுதியை தமிழக அரசு ரூ.2.33 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.