சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு நிலவுகிறது.
‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாமானியர்கள்கூட பொய்யான காணொளிகளை உருவாக்க இயலும். பின்னர் அவற்றைக் கொண்டு வதந்திகளை பரப்ப இயலும்,” என்கிறார் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கனகராஜ்.
இதுபோன்ற தகவல்கள் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
பல நாள்களாக மேற்கொண்ட தீவிர களப்பிரசாரத்தின் தாக்கத்தை இறுதி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்த்தரப்பினர் கெடுத்துவிடலாம் என்பதே வேட்பாளர்களின் கவலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி காலஞ்சென்ற தமிழக முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகிய இருவரும் பிறருடன் பேசுவது போன்று வெளியான காணொளி வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்துள்ளது.
இதுபோன்று, எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடிக்க முடியாத காணொளிகள், ஒலிப் பதிவுகள் மூலம் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு பொய்த் தகவல்கள் பரப்பப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மின்னிலக்க நகல் (டிஜிட்டல் குளோனிங்) முறையில் உருவாக்கப்படும் காணொளிகள், ஒலிப் பதிவுகளை ஒவ்வொரு வாக்காளரின் கைப்பேசிக்கும் கொண்டு செல்ல முடியும்.
“இத்தகைய மின்னிலக்க பிரசாரம் நடைபெற உள்ள தேர்தலில் சாத்தியம்தான்,” என்கிறார் பார்சனேட் நிறுவனத்தின், நிறுவன உறுப்பினரான கோவையைச் சேர்ந்த ஜெய் அரவிந்த்.
இந்நிறுவனம்தான் இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தில் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது.