சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட 1,403 பேர், 1,749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 13 பேரும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 28ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை முதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, திருச்சியில் போட்டியிடும் மதிமுகவின் துரை வைகோ, விருதுநகரில் போட்டியிடும் பாஜகவின் ராதிகா சரத்குமார், நீலகிரியில் போட்டியிடும் திமுகவின் ஆ.ராசா, ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தபால் வாக்குகளை செலுத்துவதற்கு அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் வீட்டில் இருந்தே வாக்களிக்க 4 லட்சம் பேர் பதிந்துள்ளனர் என்று திரு சத்ய பிரதா சாஹூ கூறினார்.
வரும் சனிக்கிழமை வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு அவகாசம் உள்ளது. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
நட்சத்திரப் பேச்சாளர்கள்
இதற்கிடையே, தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளை சேர்ந்த 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.ு.
பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.