மேட்டூர்: தமிழ்நாட்டின் மேட்டூரைச் சேர்ந்தவர் திரு கே.பத்மராஜன், 65.
வாகனங்களின் ‘டயர்’களைப் பழுதுபார்க்கும் கடையை நடத்திவரும் இவர், மேட்டூர் தொகுதியில் 1988ஆம் ஆண்டு முதல்முறை தேர்தலில் களமிறங்கினார்.
வெவ்வேறு தேர்தல்களில் 238 முறை தேர்தலில் போட்டியிட்டு அத்தனை முறையும் தோற்றபோதும் மனந்தளராமல் இவ்வாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
‘தேர்தல் மன்னன்’ என மக்களால் குறிப்பிடப்படும் இவர், இந்தியா முழுவதும் பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என, இவர் எதிர்த்துப் போட்டியிட்ட புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியல் நீளமானது.
மக்கள் நகைத்தாலும் அதுபற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை. சாதாரண மனிதனால் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை உறுதிசெய்வதே தனது நோக்கம் என்கிறார் இவர்.
தேர்தலில் 16 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்காவிட்டால் வைப்புத்தொகையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“எல்லா வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் நான் அப்படி விரும்பவில்லை. தோல்வி குறித்து எனக்கு மகிழ்ச்சிதான்,” என்று கூறும் இவர், ஆகப் பெரிய தேர்தல் தோல்வியாளர் என ‘லிம்கா சாதனைப் புத்தகத்தில்’ இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.