சென்னை: இந்தியா என்ற அழகிய நாட்டை பாஜக அழித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிகழ்வதைத் தடுக்க அனைத்து ஜனநாயக கட்சிகளும் இந்திய மக்களும் களம் கண்டுள்ள ஜனநாயக போர்க்களம்தான் இந்தத் தேர்தல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றும் இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்கும் அளிக்கப்படும் வாக்கு என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பாஜகவை மக்கள் ஆதரிக்கக்கூடாது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
‘எங்கும் இந்தி! எதிலும் இந்தி!’ என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என்று விமர்சித்துள்ளார்.
“விமானங்களில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.
“கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?” என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.