சென்னை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்படுவது வெறும் மாயை என்று இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் தேர்தல் கள நிலவரங்கள் வேறு மாதிரியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பெரிய திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் வழங்கவில்லை என்றார்.
“தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்களிப்புகூட கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றால் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.
“உதாரணத்துக்கு, காவிரி நதிநீர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுநிலையுடன் செயல்படவே விரும்புகின்றன. ஆனால், எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் உரிமை, தமிழக விவசாயிகளின் நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்துகிறோம்,” என்று பழனிசாமி கூறியுள்ளார்.
தேர்தல் கருத்துக் கணிப்புகளை அதிமுக நம்பவில்லை என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.