மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பான அச்சத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இரவு சிறுத்தை நடமாட்டத்தைப் பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்த கால் தடப் பதிவுகள், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை உறுதிசெய்தனர்.
பொதுமக்களை எச்சரிக்கும் வகையில், நகர் முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சிறுத்தை தென்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, சிறுத்தை நடமாட்டம் காரணமாக செம்மங்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவை உட்பட 20க்கும் மேலான பள்ளிகளுக்கு புதன்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பதுங்கியுள்ள சிறுத்தையைத் தேடும் பணி தொடர்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.