அமைச்சர் உதயநிதி, 10 நாள்கள் படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்காததால், 13 கோடி ரூபாயை இழந்து தவிக்கிறேன் என, திரைப்படத் தயாரிப்பாளர் ராம் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை வைத்து, 2018ல், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரித்தேன். இயக்குநர் அதியமான் இயக்கினார்.
உதயநிதி தன் மனைவியுடன் சேர்ந்து இரண்டு முறை கதை கேட்டு, அதன்பின் நடிக்க சம்மதித்தார். அவருக்கு சம்பளமாக, ரூ. 2.75 கோடி பேசப்பட்டு, 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
படம் துவங்கிய நாளில் இருந்து, வேகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிஜி தீவில், 42 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 2019ல், 90 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துவிட்டன. பின், கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அடுத்து, 2021ல் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது.
தேர்தல் முடிந்ததும் உதயநிதி, ‘மாமன்னன்’ படத்தை துவக்கினார். அவர் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தால், என் படம் முடிந்திருக்கும். ஆனால், அவர் கால்ஷீட் வழங்கவில்லை.
அதேநேரம், அதுவரை எடுக்கப்பட்ட படக்காட்சிகளை கேட்டார். அதை பென்டிரைவில் பதிவேற்றம் செய்து கொடுத்தோம். படத்தில், அவர் காவி உடையுடன், மிகப்பெரிய யாகம் செய்வது போன்ற காட்சியை படமாக்கி இருந்தோம்.
அதன்பின், அவர் அப்படத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், அவர் அமைச்சரானதுடன், சனாதனம் குறித்து பேசி இருந்தார்.

