திருச்சி: தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பள்ளி அருகே தேர்தல் பிரசாரம் செய்ததால் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் திண்டாடினர்.
தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலிக்கு ஓட்டு கேட்டு, தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் தேர்தல் பிரசாரத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் துவங்கினார்.
திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் காலை சுமார் 9.30 மணிக்கு, 20க்கும் மேற்பட்ட கார்களுடன் கட்சி நிர்வாகிகள் குவிந்தனர்.
சாலை முழுதும் வெடிவெடித்து, பூக்கள் துாவி அமைச்சரை வரவேற்றனர். இதனால் மூன்று கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
அதேபோல் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கம் அருகே காலை 11.00 மணி முதல் வாத்தியக் குழுவினர் அதிக சப்தம் எழுப்பி இசைத்துக் கொண்டிருந்தனர்.
மதியம் 12.30 மணிக்கு அமைச்சர் மகேஷ் பிரசாரம் செய்தபோது, அவரை வரவேற்று பட்டாசு வெடித்தும், அதிக சப்தத்தை எழுப்பினர். அப்போது, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு நடந்ததால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

