சென்னை: பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
அதிமுக தொண்டர்கள் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாக பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அவர் வெற்றியடையக்கூடாது என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக, எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
மேலும், புதன்கிழமை முன்னாள் எம்பி எம்.எஸ்.நிறைகுளத்தான், காங்கிரசில் இருந்து விலகி, செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ்.எம்.சாமிநாதன் ஆகிய மூவரை கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்மூலம் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ்சை தோற்கடிப்பதில் பழனிசாமி தீவிரமாக உள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.