சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியபோதும் ஜெயலலிதாபோல் துணிச்சலாக முடிவெடுத்ததாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளராக நல்லதம்பி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பொன்னேரியில் நடந்த பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, “அதிமுக அலுவலகத்தில் கூட்டணி ஒப்பந்தம் போடும்வரை பாஜகவிடம் இருந்து எவ்வளவோ நெருக்கடிகள் வந்தன. எல்லாவற்றையும் தூக்கியெறிந்து தைரியமாக ஜெயலலிதா மாதிரி முடிவெடுத்தேன். இந்த முறை கூட்டணி அதிமுக உடன் தான், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதியாக இருந்தேன். மக்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.
“எங்களின் வங்க் கணக்குகளை எல்லாம் முடக்குவோம் என பாஜகவினர் பயமுறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். எத்தனை சோதனைகள் வந்தாலும் பயப்படப்போவது இல்லை,” என்று கூறினார்.

