நீலகிரி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் இந்த செயலில் திமுக நிர்வாகிகள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் நபருடன் அமைச்சர் உதயநிதி நெருக்கமாக இருந்ததாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவதற்குள் உதயநிதி கைதாக வாய்ப்புள்ளது என்றார்.
“போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர், மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எனவே உதயநிதி சிறைக்குச் செல்வார்.
“அதிமுக ஆட்சியை விமர்சிக்கும்போது இருண்ட ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அது அப்பட்டமான பொய் என்பது மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,” என்றார் எடப்பாடி பழனிசாமி.